Monday, September 24, 2007

ரமலான் சிந்தனைகள் - 11

ரமலான் சிந்தனைகள் - 11

தயாள குணத்தை வளர்ப்போம்

ரம்ஜான் நோன்பு நோற்கும் போது, காலை முதல் மாலை வரை பிரச்னையில்லை.

ஏதும் சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால், மாலையில் நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில், ஏதேனும் சாப்பிட வேண்டுமல்லவா!

சாப்பிட வழியில்லாத ஏழை ஜனங்களுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ ஏதோ ஒன்று கொடுக்க வேண்டுமல்லவா!

இந்த தர்ம சிந்தனையை, நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாயகத்தின் அருமைத் துணைவியார், ஆயிஷா அம்மையாரிடம் இருந்துதான்.

அரபு நாட்டில், ஹஸ்ரத் முஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார்.

அவர் ஒரு ரம்ஜான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.

அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார்.

அப்போது பணிப்பெண் வந்தாள். "அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,'' என்றாள்.

அம்மையார் அவளிடம், "அதுபற்றி நீ கவலைப்படாதே,'' எனச் சொல்லி விட்டார்.

ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார்.

இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடை அணிந்திருக்கவில்லை. நகைகளைப் பூட்டிக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கியை அணிந்திருந்தார்.

எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்!

ஒருமுறை ஒரு பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் பசி தாளாமல் ஆயிஷா அம்மையாரிடம் வந்தாள். அப்போது அம்மையாரிடம் இரண்டே இரண்டு பேரீச்சம்பழங்கள்தான் இருந்தன. அதை அவளிடம் கொடுத்தார்.

அந்தப் பெண் அவற்றை பசியுடன் நின்ற தன் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள்.

அம்மையாரைப் போல, தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.

இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!

No comments: