ரமலான் சிந்தனைகள் - 16
பருவம் ஒரு பாடம்
குழந்தைப் பருவத்தைக் கடந்து இளைய பருவத்தை அடைந்து விட்டாலே மனிதர்களுக்கு பொறுப்பு வந்து விட வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
நபிகள் நாயகம் ஒவ்வொரு பருவத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டியதை மிக அருமையாகச் சொல்கிறார்.
"இளைஞர்களே! உங்களின் பிள்ளைப்பருவம் கடந்து விட்டது.
எனவே இறைவனுக்கு வழிபடுவதையும், நன்மையான செயல்களைச் செய்வதையும் இளமைப் பருவத்தில் தவறவிட்டால், பின்னர் எந்தக் காலத்தில் நீங்கள் அதனை ஈடுசெய்யப் போகின்றீர்?
உங்களின் இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
இளமைப் பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும்.
மண்ணறையில் இருந்து (இறந்த பிறகு) எழுப்பப்பட்டு கேள்வி கணக்கிற்காக (விசாரணை) இறைவன் முன் நிறுத்தப்படும் போது,
"ஆ! என் இளமை விளைவித்த கேடே! என்று எத்தனையோ இளைஞர்கள் அழுது புலம்புவார்கள்.
மானக்கேடே! என்று எத்தனையோ பெண்கள் கதறுவார்கள்.
ஆ! முதுமையே என எத்தனையோ முதியோர்கள் தம்மை நொந்து கொள்வார்கள்.
இத்தகைய பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்த்து வாழ்வது அறிவுள்ளவர்களுக்கு படிப்பினையாகும்''
என்கிறார் அவர்.
ஆனால், இன்று நிலைமை என்ன?
இளைஞர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் கட்டளைகளுக்குப் புறம்பாக, நாகரிகம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு கேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
சில பெண்களும் ஆபாசமாய் உடையணிந்து, இளைஞர்களைக் கெடுக்கும் நிலையில் உள்ளார்கள்.
இளமை காலத்தில் மார்க்கம் கற்றுத்தந்த பாதைக்குள் சென்றுவிட்டால், பின்னர் எக்காலமும் கவலை இல்லை.
"ஒழுக்கமுள்ளவனாக இரு. மக்களில் நீயே சிறந்தவன்.
போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.
உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு. நீயே உண்மையான முஸ்லிம்,''
என்கிறார் அண்ணல் நபிகளார்.
இளமையில் கடைபிடிக்கப்படும் ஒழுக்கம் காலம் முழுவதும் நீடிக்கும்.
இளமையிலேயே அல்லாஹ்வின் அன்புக்கு பாத்திரமாகி விட்டால், எதற்கும் கலங்கத் தேவையில்லை.
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment