ரமலான் சிந்தனைகள் - 3
வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்...
இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. இஸ்லாமுக்கு அதில் அறவே விருப்பமில்லை.
நபிகள் நாயகம், மது அருந்துதலின் தீமையைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அது வாழும் காலத்தில் மட்டுமல்ல, வாழ்க்கைக்குப் பிறகும் கடும் துயரங்களை நமக்குத் தரும்.
ஒருமுறை, நபிகள் நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். "இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,'' என்றார்.
அவரிடம் நாயகம், "அந்த மதுவில் போதை இருக்கிறதா?'' என்றார்.
"ஆம்' என பதிலளித்த தோழரிடம், "அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,'' என்றார் நாயகம்.
"சரி...நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,'' என்று தோழர் சொன்னதற்கு,
"அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,'' என்றார் நாயகம்.
குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்த வேண்டும் என்பது நாயகத்தின் கொள்கை.
மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும்.
மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான்.
ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்தார்கள். நாயகம் அவர்களிடம், "இவரை அடியுங்கள்,'' என்றார்.
சிலர் அவரை கையால் அடித்தனர். சிலர் துணியை முறுக்கி அடித்தனர். சிலர் செருப்பால் அடித்தனர்.
மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்கிறார் நாயகம்.
'மது அருந்துபவன் இறந்தால், அவனுக்கு மறுமையில், நரகவாசியின் சீழ், வியர்வை ஆகியவற்றை அல்லாஹ் அருந்தச் செய்வான்' என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது.
யோசியுங்கள்! தேவைதானா இன்னும் மது என்னும் கொடிய விஷம்!
இந்த ரம்ஜான் மாதத்தில், மதுவை இனி கண்ணால் கூட பார்ப்பதில்லை என்று உறுதியெடுங்கள்.
நோன்பிருக்கும் வேளையில், இன்றைய உயரிய சிந்தனை இது தான்!
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment