ரமலான் சிந்தனைகள் - 7
பெற்றவர்களுக்கு சேவை செய்வோம்
'இந்த உலகில் நான் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?' என்று கதறிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர்களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள்.
மரணத்துக்கு முன் தண்டனை அனுபவிப்பவர்களைப் பற்றி நபிகள் நாயகம் கூறும் போது,
"தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,'' என்கிறார்.
குர்ஆனில் அல்லாஹ், "தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,'' என்று அழகாகச் சொல்கிறான்.
ஒருமுறை நாயகத்திடம் ஒருவர் வந்து, "அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?'' என்றார்.
அண்ணலார் அவரிடம், "உமக்கு தாய் இருக்கிறாரா?'' என்றதும்,
"இல்லை'' என பதிலளித்தார் வந்தவர்.
"சிற்றன்னை இருக்கிறாரா?'' என்றதும்,
'ஆம்' என்றார்.
"அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,'' என நாயகம் கூறினார்.
"தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது' என்று சொல்கிறது இஸ்லாம்.
பெற்றவர்களுக்கு சேவை செய்வதை நமது கட்டாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment