ரமலான் சிந்தனைகள் - 8
நேர்மையாக வாழ்வோம்
வாழ்க்கையில் நேர்மை மிகமிகத் தேவை.
ஒரு கடையில், ஒரு பொருளை வாங்கச் செல்கிறோம்.
கூட்டம் அதிகமாக இருக்கிறது.
நாம் பொருளை வாங்கியவுடன், அதற்குரிய பணத்தைச் செலுத்தி விட வேண்டும்.
கூட்டத்தைப் பயன்படுத்தி, பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு வெளியே வர நினைக்கக்கூடாது.
ஒருவேளை, இந்த முயற்சியில் சிக்கிக்கொண்டால், அவமானப்படுவதுடன், வழக்கு.. விசாரணை என்று கூட போக நேர்ந்து விடலாம்.
நபிகள் நாயகத்தின் நேர்மையை வார்த்தைகளில் வடிக்க முடியாது.
ஒருமுறை அவர் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்.
அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை நாயகத்துக்குப் பிடித்து விட்டது.
அதை வாங்க எண்ணி விலை கேட்டார்.
அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
"இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே!
இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,''
என்று பேசிக்கொண்டிருந்த போது,
அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி,
"கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா?
இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை.
இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார்.
பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,'' என்றாள்.
அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம் அனுப்பி வைத்தார்.
நாயகத்துடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது,
"நபிகள் நாயகம் என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார். அவர் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறை சொல்ல இடமற்றதாகவும் இருந்தது,'' என்றார்.
நேர்மையே பெருமை தரும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment